Tamil
Tamil write ups will come under this cate.with unicode
Vannadhasan
Dec 13th
மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சை புழுவை காணோம் வெகு நாட்களாக
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக
ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக்கூடாது என்று தடுத்துவிட்டதாக
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக
இல்லை அல்லவா
அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள் தேனீர் அருந்திக்கொண்டே
சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்
- Vannadhasan @ Kalyanji
வண்ணதாசன் கேணி சந்திப்பு பற்றி குறுஞ்செய்தி வந்ததும், மனம் படபடத்தது.அவரை இந்தமுறை எப்படியும் சந்தித்து விட வேண்டும் என ஒரு பேராவல். சந்தித்து விட்டேன்.
எதிர்பார்க்கவே இல்லை
அந்தக்கவிஞரின் புதியவீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப் பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்ணாடிச்சில்லுகள்
பதிக்கப்பட்டிருக்கும் என
–வண்ணதாசன்
Allah Rakha Rahman’s New Mesmerizing Tune..
Jul 15th
Naan Eppothu Pennanen(When i became girl) – A R Rahman’s new album SAKKARA KATTI[sugar cube]
The songs which im listening in repeat mode.Here its for u.Enjoyyyyyyyyyyyyyyyyyyyyyyyy..
நான் எப்போது பெண்ணானேன்…
என் விழிகளை மெதுவாய் திறக்கச்சொல்லி எமை
விண்ணப்பம் போட்டாயே அப்போதா…
ஒரு தேவதையின் பார்வை
Jun 5th
சுருங்கி கிடக்கும் ஒரு நாளை
ஒரு தேவதையின் பார்வை
விரிவாக்குகிறது.
சிறிய மனிதர்களை வாகனங்களில்
பத்திரமாக அழைத்துச்செல்கிறார்கள்
பெரிய மனிதர்கள்.
கடந்து செல்லும் பாதையில்
மரமொன்று இலைகளை உதிர்த்துவிட்டு
தலை முழுதும் பூக்களோடு
வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
வழக்கமாக வாகன இரைச்சல்களால்
பதட்டமான கண்களோடு நடக்கும்
பசு ஒன்று..ஜென் துறவியைப்போல்
ஆழ்ந்த சிந்தனையில் நின்றுகொண்டிருக்கிறது
மைதானத்தில் கால்பந்து விளையாடும்
சிறுவர்களில் ஒருவனின் சிரிப்பு
என் பால்ய நண்பனின் சிரிப்பைப்போல
வசீகரமாயிருக்கிறது..
காலி செய்யப்பட்ட பூக்கடையிலிருந்து
மிச்சமிருக்கும் வாசணை
காற்றில் அலைகிறது
நான் முன்னே சொன்னது போல்
சுருங்கி கிடக்கும் ஒரு நாளை
ஒரு தேவதையின் பார்வை
விரிவாக்குகிறது.
தொலைத்தல் – ஒரு எளிய அறிமுகம்
May 1st
தொலைத்தல் என்பது என்ன? நம்மிடம் தற்காலிகமாக வந்து சேரும் ஒன்று பிரிந்து மூலத்திற்கோ,பிற இடத்திற்கோ இடம் பெயர்தல் என்று எடுத்துக்கொள்ளலாமா?
சிறு வயது முதல் ஏதோ ஒன்றை எப்போதாவது தொலைப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கிறேன்.
சிறிய வயதில் சிங்கப்பூர் மாமா கொடுத்த இரவில் ஒளிரும் பந்து ஒரு நாளின் காலையில் தொலைந்து போனது.சிலேட்டுக்குச்சி,சின்ன ரப்பர் செருப்பு,பாதி ஒடிந்த பென்சில்,மூன்றாம் வகுப்பில் வருடத்தின் ஆரம்பத்திலேயே தொலைந்து போன தமிழ் புத்தகம்,பெரிய வகுப்பில் நிறைய பேனாக்கள்,ஒரு நாளின் அதிகாலையில் என் அம்மா,டிசம்பர் மாத இறுதியில் ஒரு நாளின் பிற்பகளில் என் முதல் காதலி,பல அன்பான தோழர்கள்,சில ரகசிய சினேகிதிகள்,எப்போதோ என் வெகுளித்தனம்,கல்லூரி நாட்களில் கால்குலேட்டர்,முதன் முறையாக உபயோகப்படுத்திய செல்போன் இப்படி நான் தொலைத்தவைகளின் வரிசை அடைந்தவைகளின் வரிசையை விட மிக நீண்டதாக இருக்கிறது.
தொலைத்து விட்டோம் என்பதை அறியும் அந்த நொடி மிக வினோதமானது.சில நிமிட தேடல்களுக்குப்பின் உறுதி செய்யப்படும் போது மனம் ஒரு கொடுங்கனவினை காண்பது போன்ற பதபதைப்பிற்க்கு உள்ளாகியிருக்கும்.
எந்த ஒரு தருணத்துடனும் ஒப்பிட இயலாதது தொலைத்ததை உணரும் தருணம்.
வெகு இயல்பாக வந்து ஒட்டிக்கொள்ளூம் வியர்வையும்,படபடப்பும் ஒவ்வொரு முறையும் புதியது.
ஏதோ ஒன்றை அடைவதைப் போல் இல்லை ஏதோ ஒன்றை தொலைப்பது அல்லது இழப்பது.
வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிகழ்வாய் அது இருக்கிறது.தொலைத்தபின் அதை தேடும் அந்த நிமிடங்கள் ஒரு சாகச சினிமாவைபோன்றது.தொலைத்தது மிக அரிதாக சில சமயங்களில் கிடைத்துவிடும், அப்போது உதிற்கும் புன்னகை எப்பொழுதும் யாராலும் ஒளிப்பதிவு செய்யப்படாதது.Children of Heaven என்று ஓர் இரானியன் சினிமா தொலைத்தலின் கொடுர அனுபவத்தை இரக்கமில்லாமல் விவரிக்கிறது.தன் தங்கையின் ஷூவைத்தொலைத்துவிடும் ஒரு சிறுவன் அதை தேடி அலையும் இருவரின் சில நாள் வாழ்க்கை, தொலைத்தல் எத்தனை ரணமானது என்பதை காட்சிப்படுத்தியிருந்தது.Italian “BYCYCLE THIEVES”ல், புது சைக்கிள் வாங்கி உற்சாகமாக வேலைக்குச்செல்லும் ஒருவனின் சைக்கிள் அன்றே திருடப்பட்டு விடுகிறது.அதை தன் மகனுடன் தேடி அலைவதும், கடைசியில் நடக்கும் நிகழ்வுகளும் பார்வையாளனின் இரத்தநாளங்களை அறுப்பவை.
இப்படி நம்மை சுற்றி தொலைத்தவைகளின் கதைகள் அதிகம்.வரும் நாட்களில் பதிவு செய்வதாக உத்தேசம்.
என் சில கவிதைகள்
Apr 25th
அம்மா என்ன சொன்னாய் நீ..
மறந்துவிட்டாயா?
மழை வேண்டுமென்று கேட்டேனே..
கையில் பிடித்து தருகிறேன்
விரலிடுக்கில் துளிகளை
நழுவ விட்டுவிடாதே என்றாயே..
விரல்களை இறுக்க குவித்து
கையேந்தியபடி இருக்கிறேன்..
எங்கே அம்மா மழை ?..
************
கண்ணீர் வழிந்து,
காய்ந்துபோன தடத்தில்,
முத்தங்கள் வழிநெடுக..
கடவுள்களை உருவாக்கும் தேசம்
Mar 27th
தமிழ்நாட்டில் நடந்துவரும் சில விஷயங்கள் உச்சகட்ட கோபத்தை உண்டு செய்கின்றன.
அதில் ஒன்று,
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நடந்தது.தன்னுடைய Blogல் (www.jeyamohan.in) MGR,Sivaji இருவரைபற்றியும் சில விஷயங்களை எழுதியிருந்தார்.முழுக்க முழுக்க அங்கதம்(sattire) சார்ந்த ஒன்று.ஆனால் அடுத்த வாரமே வெகு ஜன பத்திரிக்கையான ஆனந்த விகடன் அதை Copy paste செய்தது..எந்த வகையான பத்திரிக்கை நாகரீகம் என்று தெரியவில்லை.
தமிழ்நாடே கொந்தளிக்கும் என்று சில பேர் பேசிக்கொண்டார்கள்.சிறு சலனம் கூட இல்லை பொது மக்கள் மத்தியில் ஆனால் சமூகப்பாதுகவலர்கள்,கலாச்சார பாதுகாவலர்களான சினிமா நடிகர்கள் வெகுண்டெழுந்து,ஆனந்த விகடனை மன்னிப்பு கேட்க வைத்தும்,ஜெயமோகனுக்கு தமிழ் சினிமாவில் வேலை செய்ய தடைசெய்தும்,தங்கள் சக்தியை மீண்டும் ஒருமுறை காட்டி விட்டனர்.மகிழ்ச்சி.ஏற்கனவே கோடம்பாக்கம் முதலமைச்சர்களை உற்பத்தி செய்யும் இடமாகிவிட்ட நிலையில்,அதிகார வர்க்கமாகவும் தற்பொழுது நிலைநாட்டிக்கொண்டது.
மரபுகளை உடைக்கக்கூடிய,பொதுப்புத்தியை அழிக்கக்கூடிய சக்தி இலக்கியம் போல் சினிமாவுக்கும் உண்டு என்ற ஆதார விஷயம் கூட தெரியாமல் புனிதங்களை கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.கதாநாயகியை மல்லாக்கப்போட்டு, மேல் ஏறிப்படுத்து,கால் முதல் கழுத்து வரை நாய் போல் முகர்ந்து பார்த்து(romance???),தொப்புளில் பம்பரம் மற்றும் ஆம்லெட் போட்டு தொழில் நடத்தும் சில சினிமா நடிகர்கள் .. கலாச்சார சக்தியாக உருவெடுப்பது இந்த சமூகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று.
சம கால சினிமா நடிகர்கள் “Demi God” ஆக கொண்டாடப்படும் இந்த philistine சமூகத்தில் மறைந்த சினிமா நடிகர்கள் புனிதர்களாகவும்,கடவுள்களாகவும்,விவாதிக்க கூடாதவர்களாகவும் ஆக்கபட்டத்தற்கு யார் காரணம் ?
நாம்தான்.
ஜெயமோகன் சொல்வதுபோல்
சிவாஜியின் சண்டை காட்சிகள் வைக்கோல் புடுங்குவது போல் தான் இருக்கும்.
MGR பாடல் காட்சிகளில் கதாநாயகிகள் மேல் ஏறிப்படுத்து நாஸ்தி செய்வார்.. உண்மைதானே!.அவர்களின் படங்களே சாட்சி.
ஒரு சினிமா நடிகனை சமூகத்தில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று நம் சமூகத்திற்கு தெரியவில்லை.ஒரு சமூகத்தில் தனக்கான இடம் எதுவென்றும் சினிமா நடிகனுக்கு தெரியவைல்லை என்ற கூற்று உண்மைதான்.Source (Theodar Baskaran’s “Chithiram Pesuthadi”).
சினிமாவில் பல படங்களில் எழுத்தாளர்கள் பைத்தியக்கரர்களாக காட்டபட,கடவுள்கள்,கலாச்சாரம்,மதம்,ஒரு மனிதனின் ஊனம்,பெண்கள் எல்லாமே கோடம்ப்பக்கத்து முட்டள்களுக்கு கிள்ளுக்கீரை.
கடவுளையே விமர்சித்து படமெடுக்கும்(Davinci Code) Hollywood எங்கே,நடிப்பை தவிர மற்ற எல்லவற்றிலும் ஈடுபட்ட(Politics,Goupism,Exploitation,Castism,Image buildup),ஈடுபடுகிற
தமிழ் சினிமா நடிகர்களை புனிதமாக்கி,விமர்சனத்திற்கும் ஏன் அங்கதத்திற்கும் அப்பால் வைக்கிற தமிழ் சினிமா உலகம் எங்கே?
ஆனால் ஒன்று,நம் சமூகத்தில் கடவுள்களின் எண்ணிக்கை பெருத்துக்கொண்டே போகிறது,
வெட்கப்படுவதா? இல்லை வழிபடுவதா? ஒன்றுமே புரியவில்லை..
வாழ்க தமிழ் சமூகம்
வண்ணதாசன் – மிக மிக ஆழ்ந்த கவனத்தோடு அணுக வேண்டிய படைப்பாளி
Mar 4th
வண்ணதாசன் (Vannadaasan) என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி (Kalyanji) என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், எஸ்.கல்யாணசுந்தரம் (S.Kalayanasundaram). இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், ‘தீபம்’ இதழில் எழுதத் துவங்கியவர். 1962ல் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதையுலகம் பிரியமும் கருணையும் நிரம்பியது. சக மனிதர்களின் மீதான அன்பும், அன்றாட வாழ்வு தரும் நெருக்கடியை மீறி மனிதன் நெகிழ்வுறும் அபூர்வ கணங்களைப் பதிவு செய்வதும் இவரது எழுத்தின் வலிமையாகச் சொல்லலாம்.
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.
சிறுகதைத் தொகுப்புகள்
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
- சமவெளி
- பெயர் தெரியாமல் ஒரு பறவை
- மனுஷா மனுஷா
- கனிவு
- நடுகை
- உயரப் பறத்தல்
- கிருஷ்ணன் வைத்த வீடு
நீல பத்மநாபன்
Mar 3rd
மனிதவாழ்க்கை என்பது வாழ்வதற்கான போராட்டம் மட்டுமே. ஆகவே மனிதர்களை அப்படி உன்னத மதிப்பீடுகளை மட்டும் வைத்து எடைபோடக் கூடாது. — நீல பத்மநாபன் [சாகித்ய அக்காதமி விருது கிடைத்தமைக்காக பாராட்டுவிழா ஏற்புரையில்.]
சுஜாதா – தனித்துவமான ஆளுமை
Feb 29th
சுஜாதாவின் மரணம் என்னை ஏதோ செய்கிறது. வழக்கம் போல் பின்னிரவு வரை இணையத்தில் மேய்ந்து விட்டு காலை ஆழ்ந்த தூக்கதிற்கு பின் விழித்தபின் அம்மாச்சி சொன்னார்கள் அந்த செய்தியை.. “ஐயய்யோ” என்றேன்.மிகுந்த துயரத்திற்கு ஆளாகியிருந்தது மனது..உடனே கைபேசியில் மனுஷ்யபுத்திரனை அழைத்ததும்,சற்றுமுன் தான் அங்கிருந்து திரும்பியதாக சொன்னார். அவர் குரலில் வேதனை அப்பியிருந்தது.சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக சொன்னார். உடனே நண்பன் ஆசைத்தம்பிக்கு தெரிவித்தேன்.அவனுக்கும் காலையின் முதல் செய்தியே அதிர்ச்சியூட்டும்படியாக இருந்தது. இழப்பின் துயரம் அவனையும் பற்றிக்கொண்டதை உணர முடிந்தது. சுஜாதா ஒரு தனி மனிதன் அல்ல.அவர் ஒரு இயக்கம் என்பதுதான் அவரைப்பற்றிய எனது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.இலக்கியம்,சினிமா,அறிவியல் என்று எல்லாவற்றிலும் நிரப்ப முடியா வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறார்.
“கரையெல்லாம் செண்பகப்பூ” — சுஜாதவுக்கும் எனக்குமான எழுத்தாளன் – வாசகன் உறவை ஏற்படுத்திய ஒன்று, பின் ‘கனவு தொழிற்சாலை’.அவரின் ஒரு நூல் எனக்கு பொக்கிஷம் போல் என்றால் அது “திரைக்கதை எழுதுவது எப்படி”. அது முதல் அவரின் மீது மிகப்பெரிய மரியாதை.அவரின் பங்களிப்பு இருக்கும் தமிழ் சினிமா தரமாக இருந்ததை உணர முடிந்தது.அந்த வகையில் எனக்கு பிடித்த இரண்டு “கன்னத்தில் முத்தமிட்டால்”,”உள்ளம் கேட்குமே”.
தமிழில் அறிவியல் புனைகதைகளுக்கான முன்னோடி.அவரின் சிறுகதைகள் போகிற போக்கில் பொட்டில் அடித்தாற்போல் ஒன்றை உணர்த்தி விட்டு போவதை பலமுறை மொளனமாக அசை போட்டிருக்கிறேன்.அவரின் பன்முக ஆளுமை அவரை நம் சமூகத்தின் தனித்துவமான மனிதராக உயர்த்தியிருக்கிறது.சுஜாதா, நம் எல்லோரையும் “மிகப்பெரிய இழப்பை” உணரச்செய்திருக்கிறார் அவரின் உன்னதமான கடைசி வெற்றியான மரணத்தின் மூலம்.




Recent Comments