சுருங்கி கிடக்கும் ஒரு நாளை
ஒரு தேவதையின் பார்வை
விரிவாக்குகிறது.

சிறிய மனிதர்களை வாகனங்களில்
பத்திரமாக அழைத்துச்செல்கிறார்கள்
பெரிய மனிதர்கள்.

கடந்து செல்லும் பாதையில்
மரமொன்று இலைகளை உதிர்த்துவிட்டு
தலை முழுதும் பூக்களோடு
வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வழக்கமாக வாகன இரைச்சல்களால்
பதட்டமான கண்களோடு நடக்கும்
பசு ஒன்று..ஜென் துறவியைப்போல்
ஆழ்ந்த சிந்தனையில் நின்றுகொண்டிருக்கிறது

மைதானத்தில் கால்பந்து விளையாடும்
சிறுவர்களில் ஒருவனின் சிரிப்பு
என் பால்ய நண்பனின் சிரிப்பைப்போல
வசீகரமாயிருக்கிறது..

காலி செய்யப்பட்ட பூக்கடையிலிருந்து
மிச்சமிருக்கும் வாசணை
காற்றில் அலைகிறது

நான் முன்னே சொன்னது போல்
சுருங்கி கிடக்கும் ஒரு நாளை
ஒரு தேவதையின் பார்வை
விரிவாக்குகிறது.