அங்காடி தெரு – எளிய மனிதர்களின் சினிமா

தன் தந்தை விபத்தில் இறந்ததும் வாழ்க்கை,படிப்பு,கனவு எல்லாம் சிதைந்து விடுகிறது ஜோதிலிங்கத்திற்கு.சென்னையில் இருக்கும் பிரமாண்டமான கடையில் வேலை செய்ய வரும் அவனுக்கும் அவன் நண்பனுக்கும்,ஆரம்பமே அதிர்ச்சி.ஜெயிலை விட மோசமான நிலையில் இருக்கும் தங்குமிடம்,ஓய்வில்லாத வேலை எல்லாம் அவர்களை சொந்த ஊருக்கே திரும்பி செல்ல எண்ண வைக்கிறது.A/C அறையில் வேலை மாற்றப்பட்டது தான் அவர்களின் Promotion.கூடவே வேலை செய்யும் கனி(அஞ்சலி)யிடம் முதலில் முறைத்துக்கொண்டாலும் பின் காதல் துளிக்கிறது.அங்கே இருக்கும் சூபர்வைசர்(Director A.Venkatesan) கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை செய்யும் ஒருவன்.காதல் செய்வது அங்கு தடை செய்யப்பட்டிருக்கும் சூழலில்,இவர்களின் காதலும்,வாழ்க்கையும் கடைசியில் என்னவாகிறது என்பதே கதை.
யாருக்கும் வராத துணிவு வசந்தபாலனுக்கு வந்திருக்கிறது.அவரின் இந்த தைரியத்திற்கு என் பாராட்டுக்கள்.சென்ற வருடம் எழுத்தாளர் சாரு நிவேதிதா புத்தக வெளியீட்டு விழாவில் அவரை பார்க்க முடிந்தது குறித்து இப்பொழுது பெருமைப்படுகிறேன்.ஆள் பலம்,பண பலம் எல்லாவற்றுடனும் வலையவரும் ஒரு கூட்டத்தின் அத்துமீரல்களை ஒரு தொழிற்சங்க போராளியைப்போல அம்பலப்படுத்தியிருக்கிறார்.
திரைக்கதையில் பல்வேறு sub-plots இருந்தாலும் எந்தவித குழப்பமும் இல்லாமல் பயணிப்பது இனிய ஆச்சர்யம்.புதுமுகம் மகேஷ் ஆச்சர்யப்படுத்துகிறார்.கனியாக நடித்திருக்கும் அஞ்சலியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.படம் முழுக்க திருநெல்வேலி தமிழ் விரவிக்கிடக்கிறது.ஜெயமோகனின் வசனங்கள் பார்வையாளனை பல இடங்களில் நேரடியாகத்தாக்குகின்றன.நான் படம் பார்த்த திருவான்மியூர் ஜெயந்தியில் முழுக்க தொழிலாளர் முகங்கள்.படம் ஓடிக்கொண்டிருந்த போது அவர்களை முகங்களை அவ்வப்போது கவனித்தேன்.சில இடங்களில் கொண்டாட்ட மனநிலையிலும்,சில காட்சிகளில் அடக்கமுடியாத கண்ணீருடனும் பார்த்துக்கொண்டிருந்தனர்.படம் எங்களுடன் நேரடியாக உரையாடிக்கொண்டிருந்தது. வசந்தபாலன் தன் முந்தைய படமான வெய்யிலில் அதிகமான Melodramaவை கலந்திருப்பார்.இந்தப்படத்தில் எல்லோரும் அவர்களின் இயல்புடனே இருக்கிறார்கள்.நான் மிகவும் ரசித்த விஷயம் இது.

படத்தின் கிளைக்கதைகள் தான் நான் இந்தப்படத்தை தூக்கி கொண்டாட ஒரே காரணம்.
- கதாநாயகனின் கூடவே இருக்கும் மாரிமுத்துவின் காதல்
- கடைக்குள் நடக்கும் காதலும்,அதன் பிறகு நடக்கும் துயரமும்
- தெருவில் போகும் ஊனமுற்றவர்,அவர் மனைவி,முஸ்லீம் பெரியவர் சார்ந்த கதை
- கனியின் தங்கை சம்பந்தப்பட்ட காட்சி
- கதாநாயகனின் தங்கை, கடைப்பைக்காக பின் தொடரும் ஒரு அற்புதமான குரும்படம்
இப்படி படம் முழுக்க கிளைக்கதைகள் நம்மை அசரடிக்கின்றன.யாரும் தொழில் முறை நடிகர்கள் இல்லை.ஆனால் நம்மால் அவர்களில் வாழ்க்கையை தரிசிக்க முடிகிறது.
இப்படிப்பட்ட படத்தின் தரத்தை குறைக்கும் இரண்டு விஷயங்கள் 1.பாடல்கள் 2.பின்னனி இசை.
சில பாடல்கள் கதையின் நம்பகத்தன்மையை,வேகத்தை குறைக்கின்றன. பின்னனி இசை நாலாந்தர மசாலா படத்தின் இசையைபோல் இருக்கிறது.இசை அனுபவமாககூட இருக்க வேண்டாம்,குறைந்த பட்சம் அந்த அற்புதமான நடிகர்களின் உணர்வுகளையாவது பிரதிபலித்து இருக்கலாம்.படம் முழுவதும் தொடரும் துயரங்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.சில காட்சிகளில் செயற்கைத்தனம் மிகுந்து காணப்படுகிறது.
பொதுவாகவே மனித உரிமை என்பதற்கு இந்தியாவில் பலருக்கு அர்த்தம் தெரிவதில்லை.அடுத்தவனின் சொத்தை,உழைப்பை,ஆளுமையை கூச்சமே இல்லாமல் திருடுவது இயல்பாகி விட்டது.அதற்கு எதிரான குரல் ஒரு முனகலை போன்றே ஒலிக்கிறது.எப்போதும்,ஒரு படத்தை பற்றிய என் பார்வையை பதியும் முன்,இரண்டு மூன்று முறை அந்த படத்தை பார்ப்பது உண்டு.ஆனால் இந்த படத்தை முதல் முறை பார்த்ததுமே எனக்கு இரண்டாவது முறை பார்க்கும் தைரியம் இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.மையங்களை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருந்த தமிழ் சினிமா,விளிம்புகளையும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. அங்காடி தெரு மூலமாக எளிய மனிதர்களின் முகங்களும்,வாழ்க்கையும் திரையில் வியாபித்திருக்கின்றன அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடந்திருக்கும் மிகப்பெரிய Shift.
Thanks : www.shaaji.com
To Read full article Click : http://musicshaji.blogspot.com/2010/05/by.html
| Print article | This entry was posted by admin on April 3, 2010 at 7:03 am, and is filed under Cinema, General, My Movies. Follow any responses to this post through RSS 2.0. You can leave a response or trackback from your own site. |

about 1 year ago
hi
u contributing good things for the people.
gud,nice.. keep it up
about 1 year ago
Thanks shanu