தொலைத்தல் - ஒரு எளிய அறிமுகம்

தொலைத்தல் என்பது என்ன? நம்மிடம் தற்காலிகமாக வந்து சேரும் ஒன்று பிரிந்து மூலத்திற்கோ,பிற இடத்திற்கோ இடம் பெயர்தல் என்று எடுத்துக்கொள்ளலாமா?

சிறு வயது முதல் ஏதோ ஒன்றை எப்போதாவது தொலைப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கிறேன்.
சிறிய வயதில் சிங்கப்பூர் மாமா கொடுத்த இரவில் ஒளிரும் பந்து ஒரு நாளின் காலையில் தொலைந்து போனது.சிலேட்டுக்குச்சி,சின்ன ரப்பர் செருப்பு,பாதி ஒடிந்த பென்சில்,மூன்றாம் வகுப்பில் வருடத்தின் ஆரம்பத்திலேயே தொலைந்து போன தமிழ் புத்தகம்,பெரிய வகுப்பில் நிறைய பேனாக்கள்,ஒரு நாளின் அதிகாலையில் என் அம்மா,டிசம்பர் மாத இறுதியில் ஒரு நாளின் பிற்பகளில் என் முதல் காதலி,பல அன்பான தோழர்கள்,சில ரகசிய சினேகிதிகள்,எப்போதோ என் வெகுளித்தனம்,கல்லூரி நாட்களில் கால்குலேட்டர்,முதன் முறையாக உபயோகப்படுத்திய செல்போன் இப்படி நான் தொலைத்தவைகளின் வரிசை அடைந்தவைகளின் வரிசையை விட மிக நீண்டதாக இருக்கிறது.

தொலைத்து விட்டோம் என்பதை அறியும் அந்த நொடி மிக வினோதமானது.சில நிமிட தேடல்களுக்குப்பின் உறுதி செய்யப்படும் போது மனம் ஒரு கொடுங்கனவினை காண்பது போன்ற பதபதைப்பிற்க்கு உள்ளாகியிருக்கும்.
எந்த ஒரு தருணத்துடனும் ஒப்பிட இயலாதது தொலைத்ததை உணரும் தருணம்.
வெகு இயல்பாக வந்து ஒட்டிக்கொள்ளூம் வியர்வையும்,படபடப்பும் ஒவ்வொரு முறையும் புதியது.

ஏதோ ஒன்றை அடைவதைப் போல் இல்லை ஏதோ ஒன்றை தொலைப்பது அல்லது இழப்பது.

வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிகழ்வாய் அது இருக்கிறது.தொலைத்தபின் அதை தேடும் அந்த நிமிடங்கள் ஒரு சாகச சினிமாவைபோன்றது.தொலைத்தது மிக அரிதாக சில சமயங்களில் கிடைத்துவிடும், அப்போது உதிற்கும் புன்னகை எப்பொழுதும் யாராலும் ஒளிப்பதிவு செய்யப்படாதது.Children of Heaven என்று ஓர் இரானியன் சினிமா தொலைத்தலின் கொடுர அனுபவத்தை இரக்கமில்லாமல் விவரிக்கிறது.தன் தங்கையின் ஷூவைத்தொலைத்துவிடும் ஒரு சிறுவன் அதை தேடி அலையும் இருவரின் சில நாள் வாழ்க்கை, தொலைத்தல் எத்தனை ரணமானது என்பதை காட்சிப்படுத்தியிருந்தது.Italian “BYCYCLE THIEVES”ல், புது சைக்கிள் வாங்கி உற்சாகமாக வேலைக்குச்செல்லும் ஒருவனின் சைக்கிள் அன்றே திருடப்பட்டு விடுகிறது.அதை தன் மகனுடன் தேடி அலைவதும், கடைசியில் நடக்கும் நிகழ்வுகளும் பார்வையாளனின் இரத்தநாளங்களை அறுப்பவை.

இப்படி நம்மை சுற்றி தொலைத்தவைகளின் கதைகள் அதிகம்.வரும் நாட்களில் பதிவு செய்வதாக உத்தேசம்.

Tags: ,

This entry was posted on Thursday, May 1st, 2008 at 7:58 pm and is filed under Litrature, Tamil. You can leave a response, or trackback from your own site.

4 Responses to “தொலைத்தல் - ஒரு எளிய அறிமுகம்”

Murugan May 4th, 2008 at 1:04 am

“சில ரகசிய சினேகிதிகள்” you mean சிட்டுக்கள் :)
உங்க வரிகள் வாசிக்க நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க prabhu!!

prabhu May 5th, 2008 at 6:59 am

கண்டிப்பாக முருகன்.உங்களின் ஊக்கம் புத்துணர்வை அளிக்கிறது ;-)

Lakshmanan May 8th, 2008 at 9:14 am

I truely enjoyed your writing. It resembles my favourite author Mr.S. Ramakrishnan. Keep writing

prabhu May 8th, 2008 at 9:42 am

Thanks lakshmanan.;-)

Leave a Reply

Your Ad Here